செய்திகள்
கோப்புபடம்

காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக என்ஜினீயர் மீது பெண் புகார்

Published On 2020-12-05 08:22 GMT   |   Update On 2020-12-05 08:22 GMT
வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என கூறி காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய என்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்தார்.
வேலூர்:

அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2006-ம் ஆண்டு திருமணம் ஆகி விவாகரத்து ஏற்பட்டது. இதனால் நான் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் பொய்கையில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றபோது விரிஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் உங்களுக்கு என்னை விட 3 வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

எனவே நாங்கள் வீட்டில் தாலிகட்டி குடும்பம் நடத்தி வந்தோம். அவரது தங்கைக்கு திருமணம் ஆனபிறகு அழைத்து செல்வதாக கூறி என்னுடன் வாழ்ந்து வந்தார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் எங்களது திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவரது திருமணத்தை தடுத்து அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.
Tags:    

Similar News