செய்திகள்
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
தூசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் தர்மாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 59), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.