செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 26). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் மணிவாசன்(20), நாட்டான்கொட்டாய் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி டேமில் இருந்து, டேம் கூட்ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள தனியார் கம்பெனி அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நாராயணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த மணிவாசன், பிரசாந்த் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டேம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இறந்த நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.