செய்திகள்
திருமாவளவன்

நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடராதது ஏன்?- திருமாவளவன் கேள்வி

Published On 2020-09-11 08:00 GMT   |   Update On 2020-09-11 08:00 GMT
7 மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில் தமிழக அரசு தொடுக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்துறை:

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில், இந்த ஆண்டும் எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டும் மருத்துவ கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுக்கும் வேண்டுகோள்.

இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை. இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் கோரிக்கை. அனிதாவை தொடர்ந்து பல மாணவச் செல்வங்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்று நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதை தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக முதல்வரே கூறியிருக்கிறார்.

ஏழு மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு கொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்கு கொடுக்காதது ஏன்? கடுமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இத்தகைய சாவுகள் தொடர்வதை தடுக்க வேண்டும்.

விக்னேஷ் உயிர் இழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும் சரி, மத்திய அரசு சரி புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு இல்லை என்றால் விக்னேஷ் எப்பொழுதோ தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவர் கல்வி பெற்று இருப்பார். அவர் மருத்துவ படிக்க இயலாமைக்கு நீட் தேர்வு தான் காரணம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசு விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க உறுதி அளித்து இருப்பதை வரவேற்கிறோம், ஆனால் இழப்பீடு போதாது.

தமிழக அரசு ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு அல்லது உயிரிழந் தவர்களுக்கு போதிய இழப் பீடு வழங்கவில்லை. விக்னேஷ் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு போதாது. எனவே இதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மாணவர்களுக்கு நான் விடுகிற வேண்டுகோள், மருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். மருத்துவர் ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய கவுரவம் என்றெல்லாம் கருதவேண்டிய அவசிய மில்லை. தன்னம்பிக்கை வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இதில் துணிவாக முடிவு எடுக்க வேண்டும், இதை நடை முறைப்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவிப்பதில் தமிழக அரசுக்கு தயக்கம் தேவையில்லை.

மத்திய அரசு நம்மீது திணிக்கிற அனைத்தையும் நெருக்கடிக்கு இடையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக முதல்வர் பின்வாங்காமல் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News