செய்திகள்
அரியலூர் மாணவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
அரியலூர் அருகே தற்கொலை செய்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ் இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை.
இதற்கிடையே 3-வது முறையாக ‘நீட்’ தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார். ஆனால், இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து விக்னேஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
‘நீட்’ தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.