செய்திகள்
கொள்ளை

ஆம்பூரில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து 20 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2020-08-31 13:38 IST   |   Update On 2020-08-31 13:38:00 IST
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:

ஆம்பூர் பெரியாங்குப்பம் காந்திநகர் எம்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அம்சவேணி (வயது 60). வேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அம்சவேணி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஊரடங்கு என்பதால் கடையை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார்.

நள்ளிரவில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வீடு முழுவதும் கடையில் இருந்த மூக்குப்பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.

இன்று காலை எழுந்த அம்சவேணி பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் அம்சவேணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News