செய்திகள்
காஞ்சிபுரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மாவட்ட விவசாய சங்கத்தின் செயலாளர் நேரு தலைமையில் விவசாய சங்கத்தினர் சமூக இடைவெளியை பின்பற்றி மத்திய அரசின் அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரி கருப்புக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் போன்றவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்குவதற்கான பணிகளை விவசாய சங்கத்தினர் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்னியூஸ்டு கட்சி நிர்வாகி கமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.