செய்திகள்
கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

Published On 2020-07-28 10:22 GMT   |   Update On 2020-07-28 10:22 GMT
உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (வயது 68). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (63). இவர்களுடைய மகன் ஆனந்தன்(36). இவரும், சலவை தொழில் செய்து வந்தார். ஆனந்தனுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனந்தனுக்கு குடி பழக்கம் இருந்ததால் அவரது மனைவி கோபித்து கொண்டு ஒரு மாதத்துக்கு முன்னர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆனந்தனின் தாய் கோவிந்தம்மாள், கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது, மருத்துவ செலவு போன்றவற்றை ஆனந்தன் கவனித்து வந்தார். ஆனாலும் கோவிந்தம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவர், தன்னை கொலை செய்து விடுமாறு பலமுறை மகன் ஆனந்தனிடம் முறையிட்டு அழுததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த துரை, மனைவி கோவிந்தம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆனந்தனை கைது செய்து விசாரித்தனர்.

போலீசில் ஆனந்தன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனது தாய் கோவிந்தம்மாள் சில மாதங்களாக நோயுற்று படுக்கையில் இருந்தார். என்னை கொலை செய்து விடுங்கள் என்று கூறி வந்தார். என்னால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை. எனது தாய், நோயின் பிடியில் சிக்கி தவித்தது எனக்கு ம வேதனையை அளித்தது. அதனால் எனது தாய் கோவிந்தம்மாள் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கைதான ஆனந்தனை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News