செய்திகள்
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பூம்புகாரில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-11 18:06 IST   |   Update On 2020-07-11 18:06:00 IST
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யக்கோரி பூம்புகாரில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:

நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த வலைகளை கொண்டு மீன்பிடிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்துள்ளன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றன. தகவல் அறிந்த மீன்வளத்துறை மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடித்த மீன்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை கருவிழந்தநாதபுரம் பகுதியில் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று பூம்புகார் துறைமுகத்தில் திரளான மீனவ பெண்களும், ஆண்களும் கூடினர். அதனை தொடர்ந்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் கருப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பூம்புகார் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பொறையாறு நண்டலாறு சோதனைச்சாவடி அருகே சந்திரபாடி பகுதி மீனவர்கள் நேற்று கையில் கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து மீனவர்கள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதில் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News