செய்திகள்
ராஜதுரை-உஷா-விமலா

சிறுக, சிறுக சேமித்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகளை மண்ணில் புதைத்து வைத்த பெண்

Published On 2020-07-11 05:19 GMT   |   Update On 2020-07-11 05:19 GMT
மாற்றுத்திறனாளி மகள் திருமணத்திற்காக சிறுக, சிறுக சேமித்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகளை மண்ணில் புதைத்து வைத்த பெண், மாற்றித்தருமாறு சைகை மூலம் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளிடம்:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52). இவர்களது மகள் விமலா(17). உஷாவும், விமலாவும் வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

உஷா, தனது சேமிப்பு பணத்தை அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி, அதனுடன் ½ பவுன் தோட்டையும் வைத்து தனது வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து உஷாவுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் ராஜதுரை வீடு கட்டுவதற்காக, பின்புறம் பள்ளம் தோண்டினார்.

அப்போது மண்ணுக்குள் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்று வெளியில் வந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 35 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. அதை வாங்கிய உஷா, அந்த பணம் தனது மகள் திருமணத்திற்காக தான் பத்திரமாக சேர்த்து வைத்துள்ளதாக சைகை மூலம் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதைக்கேட்ட தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது என தெரிவித்ததும் உஷா அதிர்ச்சி அடைந்தார். எனது மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க சைகை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News