செய்திகள்
கீழமூவர்கரை கிராமத்தில் உதவி கலெக்டர் மகாராணி தலைமையில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

படகுகளில் சீன என்ஜின்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை - மீனவர்கள் கோரிக்கை

Published On 2020-07-09 13:27 GMT   |   Update On 2020-07-09 13:27 GMT
மீன்பிடி படகுகளில் சீன என்ஜின்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம், மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவெண்காடு:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மற்றும் கீழமூவர்கரை மீனவர்களிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பது தொடர்பாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு கிராம மீனவர்களும் கத்தி, அரிவாள், சோடா பாட்டில் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் 2 கிராம மீனவர்களையும் சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தரங்கம்பாடி மீனவ கிராமத்தை தலைமையிடமாக கொண்ட 22 மீனவ கிராம பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கீழமூவர்கரை கிராமத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ், கடலோர போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஜீவானந்தம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அரசால் தடை செய்யபட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்.

அதிவேகம் கொண்ட சீன என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். தாக்குதல் நடத்திய திருமுல்லைவாசல் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கபட்டது.
Tags:    

Similar News