செய்திகள்
நகை பறிப்பு

வேலூர் சாய்நாதபுரத்தில் நடந்து சென்ற கர்ப்பிணியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

Published On 2020-01-11 11:16 GMT   |   Update On 2020-01-11 11:16 GMT
வேலூர் சாய்நாதபுரத்தில் நடந்து சென்ற கர்ப்பிணியிடம் தங்கசெயினை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

காட்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32) சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா(26). கர்ப்பிணியாக உள்ள இவர் சாயிநாதபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று வந்தார்.

தொடர்ந்து அருகில் கோவிலுக்கு நேற்றிரவு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே தனது தாய் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முகத்தில் துணி கட்டியபடியே அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தீடீரென மோனிஷாவின் அருகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துள்ளனர்.

இதை சற்றும் எதிர்பாராத மோனிஷா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடிவருவதற்குள் பைக் கொள்ளையர் தப்பினர். அதே நேரம் அவர்கள் தங்க செயினை பறித்து இழுத்ததில் 2 பவுன் அறுந்து அங்கேயே விழுந்தது. இதனால் எஞ்சிய 3 பவுன் செயினுடன் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

இது பற்றி தகவலறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News