செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2019-12-12 18:22 GMT   |   Update On 2019-12-12 18:22 GMT
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 201 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,988 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 கிராம ஊராட்சி தலைவர்கள், 167 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி முதற் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43,016 ஆண் வாக்காளர்களும், 42,022 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் மொத்தம் 85,041 பேர் 168 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

அரியலூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான அரசு கலைக்கல்லூரியில் பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையினையும், வாக்கு சீட்டுகள் பிரிக்கும் அறையினையும், வாக்கு எண்ணும் அறையினையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

மேலும், அங்கு வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையிலிருந்து, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டி எடுத்து செல்பவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தனி வழி அமைப்பதையும், பத்திரிகை மற்றும் ஊடக மையம் அமைப்பதற்கான அறையினையும், மேலும் குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப் படவுள்ளதையும் கலெக்டர் ரத்னா பார்வையிட்டார்.

ஆய்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News