செய்திகள்
படப்பை அருகே 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
படப்பை அருகே 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பி.டி.சி. காலனியில் நேற்று இரவு கொள்ளை கும்பல் புகுந்தது.
அவர்கள் பூட்டி கிடந்த 4 வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோக்களில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.
இன்று அதிகாலை அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தபோதுதான் 4 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது தெரிந்தது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருப்பதால் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்று தெளிவாக தெரியவில்லை.
அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் படப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 70 சவரன் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதே போல் வரதராஜபுரம் பகுதியில் 2 வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.
தொடர் கொள்ளை சம்பவத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.