பொன்னமராவதி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு
பொன்னமராவதி:
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் மாறன் (வயது 55). டிரைவர். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ராசுவும் பொன்னமராவதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பொன்னமராவதி வேகுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் வழிமறித்து மோட்டார் சைக்கிளில் சென்ற மாறன் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதில் மாறனுக்கு 2 கையிலும்,தோளிலும் படுகாயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம கும்பல் சுற்றியதை தொடர்ந்து ராசு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பொன்னமராவதி போலீசார்வழக்குப் பதிவு செய்து, மாறனை அரிவாளால் வெட்டியது யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது, முன்விரோதமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.