செய்திகள்
மரணம்

புதுக்கோட்டை அருகே மண் சரிந்து விழுந்து 2 பேர் பலி

Published On 2019-09-28 04:59 GMT   |   Update On 2019-09-28 04:59 GMT
புதுக்கோட்டை அருகே கட்டிடம் கட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள முத்துடையான்பட்டியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிர‌ஷர் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு வரும் ஒரு பகுதியில் மண் குவிந்து இருந்தது. நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

கட்டுமான பணிகளை, பழனிவேல் மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, அங்கு நின்று கொண்டிருந்த கிர‌ஷர் உரிமையாளர் பழனிவேல் (வயது 60), காவேரிநகரை சேர்ந்த ராசு மனைவி செல்வி (50), மேலமுத்துக்காடு மூக்கையா மனைவி மாரிக்கண்ணு (37) புதுக்கோட்டை அடப்பன்வயல் ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (32) ஆகியோர் மீது விழுந்தது.

இதில் கிர‌ஷர் உரிமையாளர் பழனிவேல் மண்ணுக்குள் புதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மண்ணுக்குள் சிக்கிய செல்வி, மாரிக்கண்ணு, மணிகண்டன் ஆகியோரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து மாரிக்கண்ணு மற்றும் மணிகண்டன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News