செய்திகள்

ராஜபாளையம் அருகே கோவிலுக்குள் நுழைந்து வி‌ஷம் குடித்தவரால் பரபரப்பு

Published On 2019-05-20 10:19 GMT   |   Update On 2019-05-20 10:19 GMT
ராஜபாளையம் அருகே கோவில் நிர்வாகிகளை கண்டித்து, முன்னாள் நிர்வாகி கோவிலுக்குள் நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமு (வயது 54), இவர் இந்த கிராம ஒரு சமுதாயத்தின் நிர்வாகியாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தார். இவர் மீது கிராம மக்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்டுராக்கன், பாரி, வில்லியாழ்வார் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து வருகிற 21-ந் தேதி கோவில் பொங்கல் விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

இந்த நிலையில் முத்து ராமு கோவிலுக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக் கொண்டு சேலையால் தூக்கு போடவும், வி‌ஷ மருந்து பாட்டிலை கையில் வைத்தும் நிர்வாகிகளை மாற்றவும், ஓட்டுப் போட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யவும், நிர்வாகிகள் கோவில் திருவிழாவை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.

தகவல் அறிந்து ராஜபாளையம் தெற்கு இன்ஸ் பெக்டர் சங்கர்கண்ணன், தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுக்கும் வரை வெளியே வர மாட்டேன் என்று கூறி விட்டதால் வேறு வழியின்றி கோவிலின் பின்பக்க தகரக்கதவை கடப்பாரைக் கம்பியால் உடைத்தனர். உள்ளே நுழைந்து அவரை மீட்டனர். அதற்குள் முத்துராமு கையில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்து, வாந்தி எடுத்தார்.

இதனால் அவரை அவசரமாக அங்கிருந்த வாகனத்தில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீசார் முத்துராமு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News