செய்திகள்

தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-05-20 09:48 GMT   |   Update On 2019-05-20 09:48 GMT
தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அன்புகுமார் (வயது27). இவர் புதுவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் பி.எஸ். பாளையத்தை சேர்ந்த முகில்அரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முகில்அரசி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்ற முதல் அன்புகுமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அய்யனாரும், அவரது மனைவியும் காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டனர். மதியம் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்கு மகன் அன்புகுமார் மின்விசிறியில் கயிறால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அன்புகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News