திருமங்கலம் அருகே விபத்து - கட்டிட தொழிலாளி பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் வெளியே புறப்பட்டார். திருமங்கலத்தில் உள்ள ராஜாஜி சிலை வளைவில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மணிகண்டன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
இதில் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த மதுரையைச் சேர்ந்த ஷியாம்சுந்தர் (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு போராடிய அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். ஷியாம்சுந்தர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றது. படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் மற்றொரு விபத்தும் நடந்தது.
திருமங்கலம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோதிகண்ணன் (38) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜோதிகண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 3 விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.