திருப்பூரில் லாரி சக்கரம் ஏறி 2 பேர் உடல் நசுங்கி பலி
திருப்பூர்:
திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.