செய்திகள்

திருப்பத்தூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்- 3 பேர் சிக்கினர்

Published On 2019-04-17 13:00 GMT   |   Update On 2019-04-17 13:00 GMT
திருப்பத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மது பாட்டில்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கனாம் பாளையம் பகுதியில் தேர்தல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மரிமாணிகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த காளியப்பன், கோபி ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணம் வினியோகம் செய்த 3 பேரையும் குறிசிலாபட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News