செய்திகள்
காதல் செய்த பெண்ணை பெற்றோர் அழைத்து சென்றதால் வாலிபர் தற்கொலை
போச்சம்பள்ளி அருகே காதல் செய்த பெண்ணை பெற்றோர் அழைத்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகே உள்ள நாகலேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சக்திவேல் (வயது21). இவர் காவேரிப்பட்டணத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வேலை பார்த்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்தபோது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள முக்குளம் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் போனில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர்.
கடந்த 10-ந்தேதி அன்று மகாலட்சுமியை சக்திவேல் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்து இருந்தார். நேற்று காலை மகாலட்சுமியை அவரது தந்தை வந்து சமாதானம் பேசி அழைத்து சென்றார். வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்த சக்திவேல் இது குறித்து உறவினரிடம் கேட்டார்.
அப்போது அவரை அவரது தந்தை அழைத்து சென்ற விபரம் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த சக்திவேல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.