செய்திகள்

மதுராந்தகம் அருகே கோவிலில் பூட்டை உடைத்து சாமிசிலை- உண்டியல் பணம் கொள்ளை

Published On 2019-04-04 13:42 IST   |   Update On 2019-04-04 13:42:00 IST
மதுராந்தகம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலை மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிச்சென்றார்.

மறுநாள் காலை பூஜை செய்ய வந்த போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது 2 அடி உயரம் உள்ள வெண்கலத்தால் ஆன உற்சவர் அம்மன்சிலை கொள்ளை போய் இருந்தது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் மாயமாகி இருந்தது.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அம்மன் சிலையையும், உண்டியல் பணத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மதுராந்தகம், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கோவிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Similar News