செய்திகள்

கொடுமுடி அருகே சுடுகாடு முன்பு தொழிலாளி அடித்துக் கொலை

Published On 2019-03-30 10:01 GMT   |   Update On 2019-03-30 10:01 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுடுகாடு முன்பு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழை நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என இரண்டு மகன்களும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள், மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவகுமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்துள்ளார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த சிவகுமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகுமார் எதற்காக சுடுகாடு அருகே உள்ள பகுதிக்கு வந்தார் என்று மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பெருந்துறை டி.எஸ்.பி நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News