சிங்காநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம் பாளையம் தாமோதரசாமி நாயுடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி(14) என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பாலாஜி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி தனது வீட்டு மாடியில் பரீட்சைக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை துணி காயபோடுவதற்காக மாடிக்கு வந்தார். அவருக்கு உதவியாக பாலாஜி துணியை எடுத்து அங்குள்ள கம்பியில் காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் தெரியாமல் கை வைத்து விட்டார். இதில் எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்ககாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.