செய்திகள்

தந்தை கண்முன்பு கட்டுமான பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2019-03-21 16:57 GMT   |   Update On 2019-03-21 16:57 GMT
செந்துறை அருகே கட்டுமான பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண்முன்பே கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் துளார் கிராமத்தில் உள்ளது. இங்கு லாரிகளுக்கான பணிமனை கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியில் கடலூர் மாவட்டம் பிலாந்துறை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, அவரது மகன் நித்திஷ் உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர். 30 அடிக்கு மேல் உள்ள செட்டில் வேலை பார்த்த நித்தீஷ் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக ஆலை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நித்திஷ் தந்தை கருணாநிதி குவாகம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தையின் கண்முன்பே கூலி தொழிலாளி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News