செய்திகள்

வேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்

Published On 2019-03-21 11:08 GMT   |   Update On 2019-03-21 11:08 GMT
வேப்பேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். #holicelebration

சென்னை:

சென்னை எழும்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக அங்கு ‌ஷவரில் தண்ணீர் விழுவதுபோல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த தண்ணீர் ஒரு தொட்டியில் நிரம்பியதும். அதில் இறங்கி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளித்து மகிழ்ந்தனர். கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

சிறுவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி இருந்தனர்.

அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் மின்சாரம் தாக்கியது. ஒரு சிறுவன் உள்பட 4 பேர் தூக்கிவீசப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை பார்த்து அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.


உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு தண்ணீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக வேப்பேரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹோலி கொண்டாட்டத்தில் கவனக்குறைவாக செயல் பட்டதே மின்கசிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #holicelebration

Tags:    

Similar News