செய்திகள்
நெல்லையில் தீயில் கருகி முதியவர் பலி
நெல்லை தச்சநல்லூரில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்ததால் தூங்கி கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரில் உள்ள மாவடிக்குளத் தாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமையா (வயது80). விவசாயி. இவர் படுக்கும் போது தினசரி கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைப்பது வழக்கம். அதுபோல கடந்த 4-ந்தேதியும் இவர் கொசுவர்த்தி சுருளை தீயில் கொளுத்தி படுக்கை ஓரத்தில் வைத்து விட்டு தூங்கினார்.
இதில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்தது. தூங்கி கொண்டிருந்த முதியவரால் எழுந்து போக முடியாததால், அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு ராமையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews