இந்தியா

டெல்லியில் 27 நாட்களில் 807 பேர் 'திடீர்' மாயம்

Published On 2026-02-05 10:09 IST   |   Update On 2026-02-05 10:09:00 IST
  • மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர்.
  • 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் முதல் 27-ந்தேதி வரை 807 பேர் மாயமாகி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்களை தேடி வந்தனர். இதில் 235 பேரை கண்டுபிடித்துள்ளனர். 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 27 பேர் காணாமல் போய் உள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போனவர்களில் தினமும் 9 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

27 நாட்களில் 191 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். அவர்களில் 48 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். 137 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்படாதவர்களில் 120 பேர் சிறுமிகள் ஆவர்.

பெரியவர்களில் 616 பேர் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்களில் 90 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் என 181 பேரை போலீசார் மீட்டுள்ளனர். 435 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு இதே வயதுள்ள குழந்தைகள் 368 பேர் மாயமானார்கள். அவர்களில் 149 பேர் மீட்கப்பட்டனர். 219 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 3 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 12 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் 169 பேர் கடந்த மாதம் மாயமானார்கள். அவர்களில் 48 பேர் கண்டுபிடிக்கப்பட்ட னர். 121 பேரை இன்னும் காணவில்லை.

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இன்னும் பலர் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 5,559 குழந்தைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 695 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 60 ஆயிரத்து 694 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 53,763 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 6,931 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சுமார் 11 சதவீதம் ஆகும்.

காணாமல் போனவர்கள் பற்றி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம், அதன் மூலம் ஆபத்தில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News