சபரிமலையில் ஈக்கள் தொல்லையால் தேவசம் ஊழியர்கள் - போலீசார் கடும் அவதி
- பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன.
- சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை வைபவத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு வைபவத்திலும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மகரவிளக்கு பூஜை வைபவம் முடிந்தபிறகு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு கோவில் மேல்சாந்திகள் மற்றும் தேவசம் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோவிலை விட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் சன்னிதானம் அருகே உள்ள விடுதியில் தங்கியிருப்பர்.
அதேபோன்று இந்த ஆண்டும் மகரவிளக்கு வைபவம் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு மேல்சாந்திகள், அவர்களது உதவியாளர்கள், தேவசம் ஊழியர்கள், பாதுகாப்பு காவலர்கள், போலீசார், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் என சுமார் 65 பேர் சன்னிதானம் அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.
அவர்கள் ஈக்கள் தொல்லையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுகள் தேக்கம் காரணமாக ஈக்கள் அதிகளவில் பெருகி விட்டதால், விடுதியில் தங்கியிருப்பவர்கள் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் ஈக்கள் தொல்லையால் உணவு சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சபரிமலையில் புனித யாத்திரை காலத்தின்போது சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பக்தர்கள் திரளக்கூடிய அனைத்து இடங்களிலும் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இருந்தபோதிலும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கும்.
அவற்றை அகற்றும் பணி யாத்திரை காலம் முடிந்தபிறகு தூய்மை படை மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டும் தூய்மை படை மூலம் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேங்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன.
பம்பை ஆற்றில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகள் மட்டும், டன் கணக்கில் எடுக்கப்பட்டன. இருந்தபோதிலும் பல இடங்களில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஈக்கள் அதிகமாக பெருகிவிட்டது. அவை எல்லா இடங்களிலும் மொய்த்தபடி இருக்கிறது.
இரவு, பகல் என்று இல்லாமல் அனைத்து நேரங்களிலும் ஈக்கள் அனைத்து இடங்களிலும் மொய்த்தபடி இருப்பதால் சன்னிதான விடுதியில் தங்கியிருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உணவு சாப்பிடக்கூட சிறிய அளவிலான மின் விசிறியை கையில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது.
மேலும் தபால் அலுவலகம், துணை மின் நிலையம், நீர்ப்பாசன அலுவலகம், பி.எஸ்.என்.எல். மற்றும் வனத்துறை அலுவலகங்களில் தங்கியிருக்கக்கூடிய ஊழியர்களும் இதே பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
சன்னிதான பகுதிகள் மட்டுமின்றி நிலக்கல், பம்பா, அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்டத்தோடு குடியிருப்பு பகுதியிலும் கடும் ஈக்கள் தொல்லை இருக்கிறது.
சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை இன்னும் பெய்யவில்லை. கோடை மழை பெய்தால் ஈக்கள் தொல்லை குறையும் உன்று உள்ளூர்வாசிகளும், தேவசம்போர்டு ஊழியர்களும் கூறுகின்றனர்.