பூதலூர் அருகே விபத்து: கல்லூரி மாணவர் பலி
பூதலூர்:
பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில்பிரிவில் படித்து வரும் மாணவர் விக்னேசுவரன் (வயது21). விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
விக்னேஸ்வரன் செங்கிப்பட்டி கடைவீதியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக தன் நண்பர்கள் பெரம்பலூர் பழமலை(20) சேலம் அஜித்குமார்(20) ஆகியோருடன் செங்கிப்பட்டி கடைவீதி நோக்கி வந்துள்ளார். செங்கிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்து மின் கம்பங்களில் மோதியது.
இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் விக்னேசுவரன் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த பழமலை திருச்சி தனியார் மருத்துவமனையிலும், அஜித்குமார் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.