செய்திகள்

பேராவூரணி அருகே விபத்து - பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2019-03-14 10:18 GMT   |   Update On 2019-03-14 10:18 GMT
பேராவூரணி அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:

பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாலா (16). இவர்கள் 2 பேரும் பேராவூரணி அடுத்த ஆவணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர்.

இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த இளந்தமிழன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இளந்தமிழன் பரிதாபமாக இறந்தார். பாலா பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாவை மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News