ஒரு மாணவர் மட்டும் படித்தாலும் பள்ளியை மூட மாட்டோம் - செங்கோட்டையன்
கோபி:
கோபியில் 1089 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கோபி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 15 லட்சத்து 47 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இணைய தள வசதியுடன் கணினியும் இணைத்து தரப்படும். இந்த வருடம் எல்.கே.ஜி-யு.கே.ஜி வகுப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33 உள்ளது. இதே போல் 9 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 123 உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். குறைந்த சேர்க்கை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் அருகில் இருந்தனர்.
முன்னதாக கோபி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். #KASengottaiyan