செய்திகள்

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை- ஜெயலலிதா பிறந்தநாளில் துவக்கி வைக்கிறார் முதல்வர்

Published On 2019-02-20 04:57 GMT   |   Update On 2019-02-20 04:57 GMT
ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். #SpecialAssistance #NarendraModi #Farmers
சென்னை:

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் உதவித் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, 2000 உதவித் தொகை வழங்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. ரூ.6 ஆயிரம் உதவித் தொகையானது 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். #SpecialAssistance  #NarendraModi #Farmers
Tags:    

Similar News