தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்போம் - ரவிசங்கர் பிரசாத்
மதுரை:
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது. வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதன் மூலம் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 17 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 52 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இடம் பெறும் அணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த வகையில் வலுவாக கூட்டணியை அமைப்போம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது விரைவில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #RavishankarPrasad