செய்திகள்

மறைமலைநகர் அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

Published On 2019-02-07 16:46 GMT   |   Update On 2019-02-07 16:47 GMT
மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வண்டலூர்:

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோகுல் சந்திரன் (வயது 19). தனியார் பஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் முத்துராமன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு ஓரே மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை நோக்கி நேற்றுமுன்தினம் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு மறைமலைநகர் அருகே செல்லும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல் சந்திரன், முத்துராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்து போன 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News