செய்திகள்

டெல்லியில் ராகுல் காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

Published On 2019-02-04 14:21 GMT   |   Update On 2019-02-04 14:21 GMT
தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார். #KSAzhagiri #congress #rahulgandhi

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு மத சார்பற்ற அரசியலை பலப்படுத்த ராகுல்காந்தி என்னை காங்கிரஸ் தலைவராக நியமித்து ஒரு புதிய கட்சி அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சேர்ந்து ஒரு வலிமையான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது தான் முதல் நோக்கம்.

தற்போது நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது. மதம், ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வு இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். மத்திய அரசு, மாநில அரசு தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளி விட்டது.

மதம், ஜாதி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு இருக்கலாம். ஒரு அரசாங்கத்துக்கு இருக்க கூடாது. இந்த அடையாளத்தை மாற்ற மக்களை பிரித்து பார்க்காதபடி சமூக அக்கறையோடு நாடு வளர்ச்சி பெற பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KSAzhagiri #congress #rahulgandhi

Tags:    

Similar News