செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற பரிந்துரைப்பேன்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

Published On 2019-01-30 08:02 GMT   |   Update On 2019-01-30 10:04 GMT
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி பரிந்துரை செய்யப்படும் என்றும் விசாரணை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். #Jallikattu
மதுரை:

கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இன்று இறுதிக்கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் 14வது முறையாக இறுதி விசாரணை 3 நாட்கள் நடைபெறுகிறது, 112 பேரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது. 14வது கட்டமாக நடைபெறும் விசாரணையோடு மதுரையில் விசாரணை நிறைவு பெறும். விசாரணையில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் என இரு தரப்பினருக்கும் ஆதரவாக சாட்சியம் மற்றும் ஆவணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.


ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி பரிந்துரை செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடரப்பட்டதை அலங்காநல்லூர் மக்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு அறிவிப்பு வந்தவுடன் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் (ஒ.பன்னீர் செல்வம்) பற்றி தவறாக பரப்புரை செய்யப்பட்டது வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தினை போராட்ட களத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் கூட விசாரணைக்கு வர மறுத்து விசாரணைக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #JallikattuProtest
Tags:    

Similar News