செய்திகள்

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 2 பேர் அதிரடி கைது

Published On 2019-01-27 06:28 GMT   |   Update On 2019-01-27 06:28 GMT
காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசார் தேடுவதை அறிந்த அவன் வெளிநாடு தப்பி சென்று இருந்தான்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் திடீரென சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டான்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கூட்டாளிகளாக இருந்த தனிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரு பிரிவாக பிரிந்தனர். அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இதனால் ரவுடி ஸ்ரீதரின் இறப்புக்கு பின்னரும் காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்கள் நடந்து வந்தன.

இந்த நிலையில் சிறையில் இருந்த தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார். கடந்த வாரம் பொன்னேரிக்கரை அருகே ஆயுதங்களுடன் சுற்றிய அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ரவுடி தனிகா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இதற்கிடையே ரவுடி தினேசின் கூட்டாளிகளான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொன்னேரிக்கரை அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றிய அவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News