செய்திகள்

அரியலூரில் நாளை மறுநாள் அ.ம.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- தினகரன் பங்கேற்பு

Published On 2019-01-23 16:47 GMT   |   Update On 2019-01-23 16:47 GMT
அரியலூரில் நாளை மறுநாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தினகரன் பங்கேற்கிறார்.
அரியலூர்:

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் திருச்சி மனோகர், பாளை அமரமூர்த்தி, மாவட்ட செயலாளர் துரை.மணிவேல் (அரியலூர்), பாலமுருகன் (கடலூர்), வக்கீல் குலோத்துங்கன், மாவட்ட தலைவர் ஜெயராமன், மாணவரணி செயலாளர் கதிர் ஜெகதீசன், ஜீவானந்தம், துரை.செல்வம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மருதை, நகர செயலாளர் தமிழரசன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் கமலகண்ணன், பொறியாளர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மாநில பொருளாளர் ரெங்கசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நாளை மறுநாள் 25-ந்தேதி அரியலூர் திருச்சி பைபாஸ் சாலையில் வாணி மகால் எதிரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மொழிப்போர் தியாகி கீழப்பழுர் சின்னசாமி வாழ்ந்த மண் அரியலூர் என்பதால் இந்த கூட்டம் அரியலூரில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், அதிக அளவு விளம்பரம் செய்ய வேண்டும். இதுவரை எங்குமே நடைபெறாத அளவிற்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கூட்டம் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம். ஆரவார மில்லாமல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும். எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் வெற்றி பெறும். இந்த கூட்டமானது அடித்தளம், வெற்றி படிகட்டுகளாக இருக்க வேண்டும். அனைவரும் சொந்த விழாவாக கருதி முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என்றார்.
Tags:    

Similar News