செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதல்- 5 மாணவிகள் காயம்

Published On 2019-01-07 11:05 GMT   |   Update On 2019-01-07 11:05 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பு.புளியம்பட்டி:

சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளி பஸ் புஞ்சைபுளியம் பட்டிக்கு வந்தது. அங்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சில் 45 மாணவிகள் இருந்தனர். பஸ்சை சத்திய மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார்.

புங்கம்பள்ளி தனியார் மில் அருகே வந்தபோது பஸ்சின் பின் பக்கத்தின் வலது ஓரத்தில் அந்த வழியாக வந்த லாரி மோதியது.

இதில் பஸ்சின் ஜன்னலுக்கு மேல் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தன. இந்த விபத்தில் பஸ்சின் பின் பக்கத்தில் இருந்த சுருதி (வயது 11), யஷ்வந்திகா, அவந்திஸ்ரீ, சம்ரிகா உள்பட 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சுருதியின் கன்னத்தில் உடைந்த கண்ணாடியால் காயம் ஏற்பட்டது.

எனவே அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News