குத்தாலம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
குத்தாலம்:
குத்தாலம் அருகே உள்ள கோவில்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 60) விவசாயி. இவர் நேற்று காலை தன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடலூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த இரண்டு பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளைபோனவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் இரவு வீட்டிற்கு வந்த செல்வராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.