செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2018-12-23 13:27 GMT   |   Update On 2018-12-23 13:27 GMT
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #pongalfestival

கரூர்:

கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

மேலும் அதில் தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கக் கூடிய ‌ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது சம்பந்தமாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உறுப்பினர்களும் மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்திலுள்ள 184 ‌ஷரத்துக்களில், 5 ‌ஷரத்துக்கள் தமிழகத்தின் உரிமையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளோம்.

திருத்தப்படா விட்டால் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை ஏதும் இல்லை. ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு போன்றவற்றை சமாளித்து தான் போக்குவரத்து கழகத்தை இயக்கி வருகிறோம். தேவையில்லாத இடங்களில் பணியாற்றுபவர்களை தேவையுள்ள இடங்களில் பணி மாற்றம் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #pongalfestival

Tags:    

Similar News