செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்ம மரணம்

Published On 2018-12-21 11:55 GMT   |   Update On 2018-12-21 11:55 GMT
நாட்டறம்பள்ளி அருகே நேற்று முன்தினம் கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மமான முறையில் தூக்கில் இறந்து கிடந்தார்.
நாட்டறம்பள்ளி:

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 50), கூலி தொழிலாளி. இவரது கணவர் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விறகு எடுத்து வர அருகில் உள்ள அக்ராவரம் மலைப்பகுதிக்கு வளர்மதி சென்றார்.

வெகுநேரம் ஆகியும் வளர்மதி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வளர்மதி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வளர்மதிக்கு அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது40) என்பவருடன் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது. அவருக்கு வளர்மதி கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை போலீஸ் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தில் உள்ள ஒரு மாமரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வளர்மதியை கொன்று விட்டு இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? சிவலிங்கம் எப்படி இறந்தார் என்பது குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News