திப்புராயப்பேட்டில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்து நாதன் பெயிண்டர் (வயது 34). இவரது மனைவி சோபியா (33). தனியார் கூட்டுறவு வங்கி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
லூர்துநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார்.
அதேபோல் நேற்றும் லூர்துநாதன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனைவி திட்டினார். இதில் மனமுடைந்த லூர்துநாதன் வம்பாகீரப் பாளையம் செஞ்சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடோனில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சோபியா வீட்டில் கணவர் இல்லாததால் தேடினார். அப்போது குடோன் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் லூர்துநாதன் தூக்கில் தொங்குவதை கண்டு சோபியாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து சோபியா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.