செய்திகள்

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் மலர் அஞ்சலி

Published On 2018-12-17 09:25 GMT   |   Update On 2018-12-17 09:25 GMT
எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி காலை அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News