செய்திகள்

ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்றவேண்டும் - பிரதமருக்கு, கமல் கடிதம்

Published On 2018-12-08 19:25 GMT   |   Update On 2018-12-08 19:25 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை அனைத்து கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். #KamalHaasan #PMModi #Parliament
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2015-ம் ஆண்டு நிலவரப்படி ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வங்காளதேசம், ஒடிசா, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேபோல தமிழகத்தில் இருந்தும் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர். உங்கள் அரசு வரையறுத்த ஆள் கடத்தல் தடுப்பு மசோதா ராஜ்யசபாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த மசோதாவை சட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆள் கடத்தல் குற்றத்தை தடுப்பதற்கு தேவையான அதிகாரத்தை சட்டத்தை அமல்படுத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு கொடுக்கவேண்டும். மேலும் மீட்கப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தொடங்க, போதுமான உதவிகளையும் செய்யவேண்டும். நடைபெற உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை அனைத்து கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றவேண்டும்.

இந்த மசோதா தொடர்பாக பல்வேறு கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை நன்கு ஆராய்ந்து, இறுதியாக அதனை நிறைவேற்றவேண்டும். நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுவதை உறுதி செய்யவேண்டும். #KamalHaasan #PMModi #Parliament
Tags:    

Similar News