செய்திகள்
மணப்பாறை அருகே மேம்பாலத்தில் லாரி-அரசு பஸ் மோதல்: 5 பேர் காயம்
மணப்பாறை அருகே இன்று அதிகாலை மேம்பாலத்தில் லாரி-அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
மணப்பாறை:
மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் எரியோடுக்கு இரும்பு புல்லட் ராடுகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து லாரியின் பின்புறம் மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து நான்கு வழிச்சாலையில் எதிர்மார்க்க சாலைக்கு சென்று சாலையோர தடுப்பில் மோதி நின்றது.
இதில் பேருந்தில் பயணம் செய்த டிரைவர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அவசரகால வாயில் வழியாக பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து பின்னோக்கி வந்து சாலை தடுப்புக்கட்டையில் மோதி நிற்காமல் சென்றிருந்தால் பின்புறம் உள்ள சுமார் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளாயிருக்கும்.அதிர்ஷ்டவசமாக பேருந்து நின்றதால் பயணிகள் உயிர் தப்பினர்.