ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பெரும் திரளாக கூடுவோம்- டி.டி.வி.தினகரன் அழைப்பு
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற் றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் அடியொற்றி அரசியல் உலகில் தனது பயணத்தை அமைத்து, சோதனை சுடு நெருப்புகள் தன்னை தீண்டியபோதும், தளராத மன வலிமைகொண்டு, எதிர்ப்புகள் அத்தனையையும் வென்று காட்டிய வீர சரித்திரம் நமது அம்மா.
ஏழைகளுக்கு ஏற்றம் தந்து, தமிழகத்தின் காவல் அரணாக திகழ்ந்திட்ட நம் அன்புத்தாயின் மறைவுக்குப் பின்னால் தமிழகத்தின் கவசமாக திகழ்ந்த இயக்கம் இன்று பூண்டிருக்கும் அவலக்கோலத்தை மாற்றிடவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவதரித்து, அ.தி.மு.கவை மீட்கும் இயக்கமாக எழுந்துள்ளது.
இந்த சத்தியப் போராட்டத்திற்கு அம்மாவின் உண்மைத் தொண்டர்களான நீங்கள் 90 சதவீதத்திற்கு மேலானோரும், தமிழக மக்களும், தங்களது பேராதரவை வழங்கிவருவதை ஒவ்வொரு களத்திலும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றாலும், அம்மா என்கிற மந்திர சொல், என்றும் நம்மை இயக்கிடும் பெரும் சக்தியாக நம் ஆயுள் முழுவதும் திகழ்ந்திடும்.
இத்தகைய பெருமைக்குரிய அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து நம் கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள மவுன ஊர்வலத்தில், நாம் அனைவரும் பெரும் திரளாய் கூடி வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் அம்மாவின் நினைவிடத்தில் சங்கமித்து இதயஅஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #jayalalitha #dinakaran