செய்திகள்

சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

Published On 2018-11-21 10:55 GMT   |   Update On 2018-11-21 10:55 GMT
சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது40). ஆட்டோ டிரைவர். மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மணிகண்டன் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணை நடத்தி சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த பாப்புலிங்கம் மகன் முத்து என்ற இசக்கிமுத்து (20), வேல்பாண்டி மகன் நெல்லப்பா (18), மரியஜோசப் என்பவரின் மகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மந்திரம் மகன் மணிகண்டன், ராஜா மகன் ஷியாம் சுதர்சன் வினோ ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வந்தனர்.

இதனிடையே போலீசார் சாத்தான்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி தப்ப முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ஷியாம் சுதர்சன் மனோ என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்திரம் மகன் மணிகண்டனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News